சிறைக்குடி ஆந்தையார் இயற்றிய ’பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன’ என்ற குறுந்தொகைப் பாடலொன்றுள்ளது. பெரு நீர்பரப்பில் கட்டற்ற காதல் கொண்டலையும் இரு நீர்பறவைகளின் பாதையில் குறுக்கிடும் பூவினால் அவை கனநேரம் பிரிந்து பின் கூடி புணர்கிறது. அக்கணநேர பிரிவு பற்பல யுகம்போல மின்னிமறைகிறது.
நெருங்கிய உறவுகளின் பிரிவென்பது அச்சமூட்டுவது. பாலைத்தினையின் பாடல்களில் அடிநாதமாக தகிக்கும் வெம்மையும் பிரிவின் கசப்பும் ஆற்றாமை கொண்டு அலறி துடிப்பதை உணரலாம்.
ஆனால் இதற்கு நேர்மாறாக குறிஞ்சி புணர்ச்சிக்குரியது. குளிர்காற்றும் பணிமழைச் சாரலும் ஈர நிலத்தில் உதிர்ந்து கொட்டும் வெங்கைப் பூக்களும் இணைதேடி அலையும் மானும் களிறும் என மலைவளத்தினை அப்படியே காட்டி இழுக்கும் பாடல்களே குறிஞ்சித்திணை.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில் குறிஞ்சியோ பாலையோ முற்றாக இருப்பதில்லை. மாறி மாறி சுழித்தடிப்பதே வாழ்க்கை.,
லூடோவிக்கோ எய்னூடியின் இசையைப் பயன்படுத்தி ENDLESS GOODBYE என வெளியாகியுள்ள ஏர்டெல் விளம்பரம் அத்தகையது. பிரிவின் துயர் மற்றும் அதன்பின் நிகழும் கூடல் என மாறி மாறி நிகழும் காட்சியாக அப்படம் அமைக்கப்பட்டுள்ளது. காதலின் பித்துநிலை கொண்ட காதலர்கள் அடங்கா ஆர்வத்துடன் சந்தித்து மகிழ்கிறார்கள். பிறகு காதலன் வேலை காரணமாக அவளை விட்டு பிரிவதும் அவள் வருந்துவதும் பிறகு அடுத்த நொடியே அவன் மீண்டும் வருவதும் களிப்புறுவதும் பிறகு மறுபடியும் பிரிவு என தொடர்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு முறையும் காதலனே பிரிகிறான். ஆணுக்கே உரித்தான பண்புகளான உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருப்பதும் பிரிவின் துயர் நெருங்காதவாறும் விலகிச் செல்வதுமாக இருக்கிறான். அதே வேளையில் துயரின் உச்சமாக காதலி காட்சியளிக்கிறாள். விளம்பரத்தின் இறுதிக் காட்சியில் இரயிலேறி செல்வான் காதலன், அப்போது தேம்பியும் கதறியும் அழும் நிலைக்கு ஒர் நூலிலை அளவே உள்ள இடைவெளியும் காதலி காட்சிதருவது பிரிவின் உச்சம். கூடலின்போது அதிகம் மகிழ்வதும் அவளே. தன்னிடமுள்ள முழுவதையும் சமர்பணம் செய்பவர்களுக்கே அது சாத்தியம். பெண்மையின் தன்மையும் அதுதானே.
**************************************************
லூடோவிக்கோ எய்னூடி (Italian pronunciation: [ludoˈviːko eiˈnaudi]) இத்தாலிய இசைவாணர், இத்தாலிய படங்கள் மற்றும் பல செவ்வியல் இசைத் தொகுப்புகளுக்கு இசை அமைத்துள்ளார்
2001ல் வெளிவந்த I Giorni என்ற பியானோ இசை தொகுப்பு புகழ்மிக்கது. அதுவே இவ்விளம்பரத்திலும் ஒலிப்பது
No comments:
Post a Comment